போடி, செப். 17: போடி அருகே சாலை விபத்தில் வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி அருகே வீரபாண்டி, சாலிமரம் தெருவை சேர்ந்தவர் வடமுத்து(47). வீரபாண்டி கோயிலில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அஜித்குமார்(27). இவர் டூவீலரில் போடி அம்மாபட்டி – டொம்புச்சேரி சாலையில் சென்றுகொண்டிருந்தார். தனியார் கோழிப்பண்ணை அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த மற்றொரு டூவீலர் அஜித்குமாரின் டூவீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதையடுத்து அஜித்குமார் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை அந்த பகுதியினர் மீட்டு தேனி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின்பேரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.