பூந்தமல்லி: பொழுதுபோக்கு பூங்காவிற்கு வருபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு வாரம்தோறும் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பூந்தமல்லி அடுத்த பாப்பான்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவிற்கு நேற்று வந்த பொதுமக்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி போட்டு சுமார் அரை மணிநேரம் ஓய்வு எடுக்க வைத்தனர். அதன்பிறகு பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்ல நுழைவுசீட்டு வழங்கப்பட்டது. மேலும், தடுப்பூசி செலுத்தியவர்கள் அதற்கான சான்றுகளை காண்பித்த பிறகே பொழுதுபோக்கு பூங்காவிற்குள் அனுமதிக்கப்பட்டனர். அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. …