வேலூர் : தமிழகத்தில் நடைபெறும் கால்நடை சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் கறவை மாடுகள், காளைகள், எருமைகள், மற்றும் ஆடு, கோழிகள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் பொய்கை மாட்டுச்சந்தையில் கடந்த வாரத்தை விட நேற்று அதிகளவில் மாடுகள் வரத்து காணப்பட்டது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கால்நடைக்கான தீவனத்தின் விலை உயர்வால் மாடுகள் வளர்க்க முடியாமல் விவசாயிகள் விற்பனை கொண்டு வந்துள்ளனர். இன்று(நேற்று) 700க்கும் மேற்பட்ட மாடுகள் சுமார் ₹70 லட்சத்திற்கு விற்பனையானது. இனி வரும் வாரங்களில் பொய்கை மாட்டு சந்தைக்கு கால்நடைகளின் வரத்து அதிகரிக்கும்’ என்றனர்….