பொன்னை : பொன்னை ஆற்றில் கீரைச்சாத்து ஊராட்சிக்கு செல்லும் போர்வெல் பம்ப் அருகே புதைக்கப்படும் சடலங்களால் குடிநீர் மாசடையும் அவலநிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம், பொன்னை அடுத்த கீரைச்சாத்து ஊராட்சியில் கீரைசாத்து, மிளகாய்குப்பம், கீரைச்சாத்து காலனி ஆகிய கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு பொன்னை ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுற்றுபுற கிராமங்களை சேர்ந்த சிலர் இறந்தவர்களின் சடலங்களை போர்வெல் பம்பு அருகே புதைத்து விட்டு செல்கின்றனர். இதனால். குடிநீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து பம்ப் ஆபரேட்டர் பலமுறை ஆற்றில் சடலங்களை புதைப்பவர்களிடம் எடுத்துக்கூறியும் அவர்கள் கண்டுகொள்ளாமல் தகராறில் ஈடுபடுகின்றனர். மேலும் கிராம இளைஞர்கள் சிலர் இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ஆற்றில் குடிநீர் வினியோகம் செய்யும் போர்வெல் பம்ப் சுமார் 30 அடி ஆழத்தில் உள்ளது. போர்வெல் பம்ப் அருகிலேயே சடலங்களை புகைப்பதால் குடிநீர் மாசடைந்து வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல்வேறு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போர்வெல் பம்ப் அருகே சடலங்களை புதைக்காமல் தடுத்து மாற்று இடம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….