பொன்னமராவதி,ஆக.22: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இயங்கிய ஆதார் சேவை மையம் ஒரு மாதத்திற்கு பின்னர் தினகரன் செய்தி எதிரொலியால் மீண்டும் இயங்கியது. பொன்னமரவாதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல்பட்டு வந்த ஆதார் சேவை மையம் கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்டு கிடந்தது. தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் ஆதார் சேவை பெற அங்கு சென்று பார்த்து அழைந்து சென்றனர். இந்த நிலையில் இந்த ஆதார் சேவை மையத்தினை மீண்டும் செயல்பட செய்ய வேண்டும் என தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதை பார்த்த அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து நேற்று முதல் மீண்டும் அந்த ஆதார் சேவை மையம் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு சேவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த மையம் அடிக்கடி மூடப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு பொதுமக்களை அலையவிடாமல் புதிதாக ஆதார் எடுத்தல், பெயர் திருந்தம், புகைப்படம் மாற்றுதல், போன் நம்பர் மாற்றுதல் உள்ளிட்ட ஆதார் சேவைப் பணிகளை செய்யவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தினகரன் செய்தி எதிரொலியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி கூறினர்.