பொது இடத்தில் மது குடித்தவர்களை தட்டி கேட்டவர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு- வாலிபர் கைது

விருத்தாசலம், ஜன. 7: விருத்தாசலம் ஆலடி ரோடு பாரதிநகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் செல்வம்(30). இவர் நேற்று முன் தினம் இரவு விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் இருந்து முல்லை நகர் வழியாக ஆலடி ரோட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே மது அருந்தி கொண்டு ஆபாசமாக பேசிக் கொண்டிருந்த 4 பேரிடம், ஏன் இங்கு மது அருந்துகிறீர்கள் என கேட்டதற்கு அந்த 4 பேரும் சேர்ந்து செல்வத்தை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் செல்வத்தை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில், அங்கு சென்ற போலீசார் தாக்கியவர்கள் குறித்து விசாரணை செய்ததில், பழமலைநாதர் நகரை சேர்ந்த காமராஜ் மகன்கள் சக்திவேல்(23), கந்தவேல் (21), முருகன் மகன் சிவா(21), பெரியார் நகர் அஜித் (21), ஆகிய 4 பேர் என தெரிய வந்தது. தொடர்ந்து சக்திவேல், கந்தவேல், சிவா, அஜித் உள்பட 4 பேர் மீதும் வழக்கு பதிந்து சக்திவேலை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருத்தாசலம் பேருந்து நிலைய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மீது தாக்குதல் நடந்து வரும் சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை