வாலாஜாபாத்: வாலாஜாபாத் நகரில் தங்களின் பொது அறிவை வளர்த்துக் கொள்ள ஒரு நூலகம்கூட இல்லை என மாணவ-மாணவிகள் ஏக்கத்துடன் தெரிவித்தனர். தங்களுக்கு இங்கு ஒரு பொது நூலகம் அமைத்து தரவேண்டும் என வலியுறுத்துகின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு பேருந்து நிலையம், ரயில் நிலையம், வங்கிகள், கருவூலம், ஒன்றிய-தாலுகா அலுவலகங்கள், காவல் நிலையம், அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இத்துடன் வாலாஜாபாத் நகர் பகுதியில், பழைய பேரூராட்சி அலுவலகம் அருகே கடந்த 35 ஆண்டுகளாக ஒரு நூலகம் செயல்பட்டு வந்தது. நாளடைவில் முறையான பராமரிப்பின்றி நூலக கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு, அதன் வழியே மழைநீர் உள்ளே நுழைந்து, அங்கிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் நாசமாகி விட்டதாக கூறப்படுகிறது.மேலும், இந்த நூலகம் பிரதான சாலையை ஒட்டியே செயல்படுவதால், வாகனங்களின் இரைச்சலால் வாசகர்கள் படிக்க முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதுதவிர, இங்கு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு தேவையான புத்தகங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி ஏக்கத்துடன் இருந்து வருகின்றனர். எனவே, வாலாஜாபாத் நகரிலேயே மற்றொரு இடத்தில் புதிய நூலகக் கட்டிடம் கட்டி, அதில் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் அறிவியல், வரலாற்று வல்லுநர்களின் படைப்புகள் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ-மாணவிகள் வலியுறுத்துகின்றனர்….