‘’பொதுமக்களின் நலன்தான் முக்கியம்’’.. 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது : ஐகோர்ட் உத்தரவு

சென்னை:நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது. 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தப்படுவதால் விபத்து காலங்களில் ‘ஏர் பேக்’ செயல்பட முடியாத நிலை ஏற்படுவதாகவும் எதிர்வாகனம் மற்றும் பொதுமக்களுக்கும் கடுமையான சேதம் ஏற்படுகிறது எனவும் அறிவித்து நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்த ஒன்றிய அரசு தடை விதித்தது. இந்த தடையை மீறி நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்தப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் லெனின் பால் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘’பொது மக்கள் மட்டுமல்லாமல் அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் வாகனங்களில் கூட இதுபோன்ற தடை செய்யப்பட்ட பம்பர்கள் பொருத்தப்படுகிறது’’ என்று அதிருப்தி தெரிவித்திருந்தனர். இதையடுத்து, கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்ட பம்பர்களை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் 5 ஆயிரம்  ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரித்தனர். இந்த நிலையில், ஒன்றிய அரசின் உத்தரவை எதிர்த்து பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘’பம்பர்களால் வாகன விபத்து ஏற்படுகிறது என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் ஏதுமில்லை. வாகனங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு எந்த பாதிப்பு இல்லை. கடந்த 1980ம் ஆண்டு முதல் வாகனங்களில் பம்பர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பம்பர் என்பது வாகனங்களுக்கான கூடுதல் வசதி மட்டுமே’’ என்றார்.இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘’பொதுமக்களின் பாதுகாப்பு மிக அவசியம். பம்பர் பொருத்திய வாகனங்களின் ஓட்டுனர்கள் அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுவார்கள். பொதுமக்களின் நலன் கருதியே ஒன்றிய அரசு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இது ஒன்றிய அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஒன்றிய அரசின் உத்தரவை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. மாநில அரசுகள் இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை