சிதம்பரம் : தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக இருப்பது, பொங்கல் பண்டிகை என்றதும், நம் அனைவரின் நினைவுக்கு முதலில் வருவது கரும்பு தான். ஒவ்வொரு தமிழர்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள். அன்றைய தினம் வீட்டு வாசலில் கோலமிட்டு, அடுப்பு வைத்தும் மண்பானையில் பொங்கலிட்டு கரும்பு வைத்து புத்தாடை உடுத்தி தங்கள் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளர். இந்நிலையில் தை பொங்கல் வரும் ஜனவரி 15 ம்தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையொட்டி சிதம்பரம் பகுதிகளான பழையநல்லூர், அகரநல்லூர், வேளக்குடி, சாலியான் தோப்பு, அகரநல்லூர், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஏக்கருக்கு மேல் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். மேலும் பருவமழை சரியான நேரத்தில் பெய்ததால், கரும்புகள் 5 அடி முதல் 6 அடி வரை, நன்கு செழித்து வளர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து பழைய நல்லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் கூறுகையில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக பல ஏக்கரில் கரும்புகளை சாகுபடி செய்து வருகிறோம். ஒரு ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்தால், 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்புகள் கிடைக்கும். தற்போது கரும்புகள் நல்ல முறையில் வளர்ந்து தயார் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்கும், புதுவருடத்தின் 1ம் தேதி முதல் கரும்புகளை அறுவடை செய்து, அதனை புதுச்சேரி, சென்னை, வேலூர், விழுப்புரம் செஞ்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கி செல்வார்கள். 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 300க்கு வாங்கி செல்வார்கள். மேலும் தற்போது தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்புகளை சேர்த்து கொடுத்தால் எங்களுடைய வாழ்வாதாரம் மேம்படும். இதனால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைவார்கள். சென்ற ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, அரசே கரும்புகளை கொள்முதல் செய்தது. புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள தமிழக அரசு பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பல நல்ல திட்டங்களை செய்து வருகிறார்கள். எனவே எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்….