சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 20 வகையான பொங்கல் தொகுப்பு எல்லோருக்கும் முறையாக சென்றடையும் வகையில் கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார். உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், வருகிற 2022ம் ஆண்டு பொங்கல் அன்று அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில், ஒவ்வொரு நியாய விலை கடைகளின் எண்ணிக்கையை பொறுத்து ஒரு நாளுக்கு எத்தனை டோக்கன்கள் கொடுக்க வேண்டும் என்பதை அவரே அறிவித்து, எல்லோருக்கும் பொருட்கள் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்வார்கள். இந்த தொகுப்புகள் பயனாளிகளுக்கு முறையாக சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க வட்ட அளவில் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பரிசு தொகுப்பு வழங்குவதற்கும் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தப்போகிறோம். புதிதாக குடும்ப அட்டை கேட்டு யார் விண்ணப்பம் செய்தாலும் 15 நாட்களுக்குள் வழங்கப்படும். இதுவரை 7 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….