திருவொற்றியூர்: திருவொற்றியூர் விம்கோ நகர் அருகே மெட்ரோ ரயில் மேம்பாலத்தில் இருந்து மழைநீர் வெளியேற முறையாக பைப்லைன் அமைக்காததால், சாலையில் அருவிபோல் தண்ணீர் கொட்டுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த மெட்ரோ ரயில் மேம்பாலத்தில் மழைநீர் வெளியேறும் வகையில் பைப்லைன் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால், மழைக்காலங்களில் பல இடங்களில் மேம்பாலத்தில் இருந்து தண்ணீர் சாலையில் அருவிபோல் கொட்டுகிறது.சென்னையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால், அதுபோன்ற நேரங்களில் விம்கோ நகர், தேர, போன்ற பல இடங்களில் மெட்ரோ ரயில் மேம்பாலத்தில் இருந்து மழைநீர் அருவி போல் சாலையில் கொட்டியது. இதனால், அவ்வழியே சென்ற இருச்கர வாகன ஓட்டிகள் நனைந்து பெரிதும் சிரமப்பட்டனர். இருசக்கர வாகனத்தில் சென்ற பலர், மழையில் நனையாமல் இருக்க சாலையோரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு, பின்னர் சென்றனர். அவ்வாறு நின்றவர்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, மெட்ரோ ரயில் நிர்வாகம் உடனடியாக இதுகுறித்து ஆய்வு செய்து, மழைநீர் வடிகால் பைப்லைன் அமைக்க தவறிய இடங்களில், உடனடியாக பைப்லைன் அமைத்து, சாலையில் தண்ணீர் ஒழுகாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….