பைக் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி

கடலூர், பிப். 16: கடலூரில் பைக் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் அருகே உள்ள தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன் மகன் அபிஷேக் (20). இவர் கடலூர் பெரியார் அரசு கலை கல்லூரியில் இளங்கலை 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அபிஷேக் நேற்றுமுன்தினம் நள்ளிரவு தனது நண்பர்களுடன் பைக்கில் பண்ருட்டியில் இருந்து கடலூருக்கு வந்து கொண்டிருந்தார். கடலூர் செம்மண்டலம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த தனியார் பேருந்து ஒன்று அபிஷேக் மற்றும் அவரது நண்பர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் அபிஷேக் படுகாயம் அடைந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அபிஷேக் பரிதாபமாக உயிரிழந்தார். அபிஷேக் நண்பர்கள் அபினேஷ் மற்றும் சந்துரு ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார், கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அபிஷேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு