பைக்குகள் மோதி ஐடிஐ மாணவர் பலி

பாகூர், ஜூன் 23: பாகூர் அடுத்த தமிழக பகுதியான கரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (50), கூலி தொழிலாளி. இவரது மகன் ராகவன் (19). கடலூரில் ஐடிஐ படித்து வந்தார். இந்நிலையில் ராகவனின் அண்ணன் மனைவிக்கு நேற்று முன்தினம் இரவு குருவிநத்தத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு தேவையான சில பொருட்களை வாங்குவதற்காக ராகவன், தனது சித்தப்பா சிவாவின் மகன் இளம்பருதி (15) என்பவரை அழைத்து கொண்டு பாகூர் நோக்கி சென்றார். குருவிநத்தம் மாஞ்சாலை சாலையில் உள்ள வானக்கோட்டா அருகே சென்றபோது ராகவன் ஓட்டி சென்ற பைக்கும், எதிரே வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதியது.

இதில் ராகவன், இளம்பருதி ஆகியோர் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, பாகூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராகவன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இளம்பரிதிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதிரே பைக்கில் வந்த கடலூர் வெள்ளப்பாக்கத்தை சேர்ந்த பரசுராமன் (25) என்பவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், ஏட்டு செல்வவிநாயகம் ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு