அண்ணாநகர்: பைக்கில் பெட்ரோல் தீர்ந்து நடுவழியில் நின்ற 2 வாலிபர்களை சரமாரி தாக்கி பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்ற 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர். வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (21). இவர் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது நண்பர் அத்வைத் (21). இவர் வளசரவாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இவர்கள் ஆலப்பாக்கத்தில் உள்ள நண்பர்களை பார்ப்பதற்காக பைக்கில் சென்றனர். அப்போது பெட்ரோல் இல்லாமல் நடுரோட்டில் பைக் நின்றுவிட்டது.அப்போது, அவ்வழியாக 3 பைக்குகளில் வந்த 7 பேர், உதவி செய்வது போல் நடித்து இருவரையும் அங்குள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்து சென்று, சரமாரியாக தாக்கி அவர்களிடம் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள வாட்ச், ரூ.3 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன்கள் மற்றும் ஹெட்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர். இதுபற்றி சஞ்சய், அத்வைத் ஆகியோர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, காயமடைந்த இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பியோடிய 7 பேரை தேடி வருகின்றனர்….