பேரையூர், செப். 28: கண்மாயில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து, பேரையூர் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். பேரையூர் அருகேயுள்ள சின்னப்பூலாம்பட்டி கண்மாயில், முறையாக அனுமதி பெற்று, வண்டல் மண் அள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் இக்கிராம மக்கள் விவசாய நிலத்திற்கு மண் அள்ளிப் பயன்படுத்தாமல், செங்கல் காளவாசலுக்கு மண் அள்ளுவதாக குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று பேரையூர் தாலுகா அலுவலகத்தை இக்கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அவர்களுடன் தாசில்தார் செல்லப்பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது கிராம மக்கள், ‘‘எங்கள் கண்மாயில் கிராமத்திலுள்ள விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மண் அள்ள வேண்டும். எங்கள் கவனத்திற்கு வராமல் மண் அள்ளக்கூடாது’’ என்றனர். இதற்கு பதிலளித்த தாசில்தார், ‘‘கலெக்டர் உத்தரவின் பேரில் அரசாணையின் அடிப்படையில் முறையாக மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயன்படும் வகையில் வண்டல் மண் அள்ளிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது’’ என்றார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.