தண்டையார்பேட்டை: பாரிமுனை மார்க்கத்தில் இருந்து வடசென்னையின் இதர பகுதிகளுக்கு செல்லும் மாநகர பேருந்துகளில் பயணிகளிடம் தொடர்ச்சியாக செல்போன்கள் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து, சாதாரண உடையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். மேலும், சம்பவ இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், பிரபல திருடர்கள் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பாலு, லொடுக்கு சத்யா ஆகியோர் செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை பிடித்து விசாரித்தபோது, திருடிய செல்போன்களை சையது என்பவரிடம் கொடுத்து, பர்மா பஜார் கடை உரிமையாளர் மருதுபாண்டி என்பவரிடம் விற்றது தெரிந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 30 ஸ்மார்ட் போன்களை பறிமுதல் செய்தனர். கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது: எருக்கஞ்சேரி திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் வேலு (37). இவர், காய்கறி வாங்குவதற்காக எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை வழியாக சென்றபோது, 2 பேர் வேலுவை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து வேலு கொடுத்த புகாரின்படி, எம்கேபி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, எம்கேபி.நகர் 10வது கிழக்கு குறுக்கு தெருவை சேர்ந்த மணிவண்ணன் (35) என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பிரவீனை தேடி வருகின்றனர்….