கறம்பக்குடி: கறம்பக்குடி அருகே தார்சாலை சீரமைக்கப்படாததால், மாணவர்கள் பள்ளிக்கு தைல மரக்காட்டு வழியாக சென்று வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உடனே தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே முள்ளங்குருச்சி ஊராட்சியில் ஏராளமான கிராமங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் 250க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் அரசு பள்ளிக்கூடம் இல்லாத காரணத்தினால் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அருகில் உள்ள முள்ளங்குருச்சி ஊராட்சியில் உள்ள அரசு பள்ளிக்கு 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டது.
தற்போது அந்த சாலை பராமரிப்பு இல்லாமல் குண்டும், குழியுமாக கிடக்கிறது. இந்த சாலையில் போக்குவரத்துகூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. மேலும் இப்பகுதியில் தரைபாலம் ஒன்று உடைந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்று 3 கி.மீட்டர் தூரம் நடந்து சென்றுதான் பேருந்தில் பயணிக்க முடியும். மேலும் சாலை வசிதி இல்லாததாலும், பேருந்து வசதி இல்லாததாலும பள்ளி மாணவர்கள் தைல மரக்காட்டு வழியாக நடந்து செல்கின்றனர். பள்ளி மாணவர்கள் அந்த வழியாக செல்லும் போது அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பள்ளிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.