சிவகாசி: காலண்டர் தயாரிப்பிற்கு பயன்படும் அட்டை, காகிதம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை திடீரென 20 சதவீதம் உயர்ந்ததால் காலண்டர் உற்பத்தியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சக தொழில் நடந்து வருகிறது. இந்த தொழிலில் தினசரி மற்றும் மாத காலண்டர் தயாரிக்கும் பணி பிரதானமாக உள்ளது. சிவகாசியில் 2022ம் ஆண்டிற்கான தினசரி காலண்டர், மாத காலண்டர்கள் தயாரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகாசியில் காலண்டர் தயாரிப்பு மூலம் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுகிறது.சிவகாசியில் உள்ள 800க்கும் மேற்பட்ட அச்சகங்களில் நாள் காட்டி தயாரிப்பு பணிகளில் ஒரு லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். காலண்டர் தயாரிப்பில் அட்டை, ஆர்ட் பேப்பர், களிங்கம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு 15 சதவீதம் மூலப்பொருட்கள் விலை உயர்ந்த நிலையில் அட்டை, காகிதம் தட்டுப்பாடு காரணமாக மீண்டும் திடீரென 20 சதவீதம் விலை உயந்துள்ளது காலண்டர் உற்பத்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற ஒரு டன் அட்டை, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 28 ஆயிரம் ரூபாயாகவும், தற்போது 38 ஆயிரம் ரூபாயாகவும் விற்கப்படுகிறது. 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற ஆர்ட் பேப்பர் கடந்த ஜூலை மாதத்தில் 72 ஆயிரமாகவும், தற்போது 84 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு 12 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரி கடந்த 1ம் தேதி முதல் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 2022ம் ஆண்டு காலண்டர்களின் விலை உயர்வு 35 சதவீதம் வரை இருக்கும் என்று காலண்டர் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்….