சென்னை, மே 31: கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (38). இவர் வீட்டின் அருகில் உள்ள ‘சிகே பேக்கரி’ என்ற பெயரில் இயங்கும் கடையில் நேற்று முன்தினம் மாலை தனது குழந்தைகள் மற்றும் உறவினர் குழந்தைகளுக்கு டோனட் கேக்குகள் வாங்கி கொடுத்துள்ளார். கேக் சாப்பிட்ட சிறிது நேரத்தில் 3 குழந்தைகள் அடுத்தடுத்து வாந்தி எடுத்து வயிற்றுக்போக்குடன் மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த யுவராஜ் குழந்தைகளை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.
அங்கு ஆய்வு செய்த டாக்டர்கள் கேட்டுப்போன கேக் சாப்பிட்டதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயங்கியது தெரியவந்தது. உடனே சம்பவம் குறித்து யுவராஜ் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு வந்து விசாரணை நடத்தினர். அதேநேரம் குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட தகவல் அறிந்த பேக்கரி கடை ஊழியர்கள் கேக்குகளை அனைத்து குப்பை தொட்டியில் வீசியுள்ளனர். போலீசார் பேக்கரி கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.