கராச்சி: பாகிஸ்தானில் மனைவியை கொன்று தனது 6 குழந்தைகளின் கண் முன்னே, கொப்பரையில் போட்டு வேக வைத்த கணவனின் கொடூரச் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள கராச்சியில், குல்ஷன் இ இக்பால் பகுதியில் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டுள்ள தனியார் பள்ளியின் காவலாளியாக பணியாற்றி வந்தவர் ஆஷிக், இதே பள்ளி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் இவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், ஆஷிக்கின் 15 வயது மகள் நேற்று முன்தினம் போலீசில் ரத்தத்தை உறைய வைக்கும் புகாரை அளித்தார். அந்த சிறுமி சொன்ன இடத்துக்கு சென்ற போலீசார், சமையறையில் உள்ள கொப்பரையில் ஆஷிக்கின் மனைவி நர்கீசின் உடலை வெந்த நிலையில் மீட்டனர். முதல் கட்ட விசாரணையில், தனது 6 குழந்தைகளின் கண் முன்பே, நர்கீசை கொன்று கொப்பரையில் போட்டு வேக வைத்து ஆசிக் கொன்ற கொடூரம் தெரிய வந்தது. அவர் எதற்காக இவ்வளவு கொடூரமான கொலையை செய்தார் என்று தெரியவில்லை. இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளாத குழந்தைகள் 3 பேர் தற்போது போலீஸ் பாதுகாப்பில் உள்ளனர். மற்ற 3 குழந்தைகளுன் ஆஷிக் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்….