லால்குடி, நவ.28: லால்குடி அருகே பெருவளநல்லூர் ஊராட்சியில் வருமுன் காப்போம் முகாம் நடைபெற்றது. இதில் 941பேர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் பெருவளநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை பெருவளநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கிரிவாசன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் பிச்சைமணி முன்னிலை வகித்தார்.
முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. புதூர் உத்தமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் செல்வ விநாயகம் ஆலோசனையின்படி மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயந்த்முரளி தலைமையில் மருத்துவ குழுவினர், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், சித்த மருத்துவர்கள், பல் மருத்துவர், திருச்சி கிஆபெவி மருத்துவக் கல்லூரி சிறப்பு மருத்துவர்கள், மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்றது.
941 பேர் பரிசோதனையில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், பிசியோதெரபிஸ்ட், மருத்துவமல்லா மேற்பார்வையாளர், சமுதாய சுகாதார செவிலியர், செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், மருந்தாளுநர்கள், வட்டார சுகாதார புள்ளியியலர், ஆய்வக நுட்புநர்கள், மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்களும், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊட்டச்சத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மதிவாணன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.