* திருமணத்துக்கு 200 பேர் பங்கேற்கலாம்* துணி, நகைக்கடைகள் 100% இயங்கலாம்.* அரங்க நிகழ்ச்சிகளுக்கு 100% பார்வையாளர்கள்.* பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கான தடை தொடரும்.* அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி.சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமாக குறைந்து வருவதால், திரையரங்கு, உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்களில் 100 சதவீதம் பேருக்கு அனுமதி அளிப்பது என்றும், 16ம் தேதி முதல் நர்சரி பள்ளிகள் திறக்க அனுமதி உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலானவை நீக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நர்சரி பள்ளிகள் திறக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தது. இதையடுத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். இதன்மூலம் கொரோனா படிப்படியாக குறைந்தது. தினசரி பாதிப்பு 500க்கும் கீழ் வந்தது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவின் 3வது அலை மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியது. ஜனவரி மாதம் தினசரி பாதிப்பு 30 ஆயிரம் வரை அதிகரித்தது. இதையடுத்து இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஓட்டல்கள், தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை விடுதிகள், ஜவுளி கடைகளில் பொதுமக்கள் குறைந்த அளவே அனுமதிக்கப்பட்டனர். ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைய தொடங்கியது. இதையடுத்து, இரவு நேர ஊடரங்கு கடந்த 28ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. மேலும், பிப்ரவரி 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் வேகமாக குறைய தொடங்கியுள்ளது. நேற்று நிலவரப்படி, தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்துக்கும் கீழ் இருந்தது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், பொதுமக்களும் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும், புதிய வகை கொரோனா வைரசால் பொதுமக்கள் பெரிய அளவுக்கு பாதிக்கப்படவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டியதில்லை என்பதால், பொதுமக்களுக்கும் கொரோனா பற்றிய பயம் ஓரளவு நீங்கியுள்ளது. ஆனாலும், இணை நோய் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அனைவரும் இரண்டு கட்ட தடுப்பூசி போட வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை மேலும் குறைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். இதுகுறித்து நேற்று காலை 11 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் குமார் ெஜயந்த், பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சிறப்பு பணி அலுவலர் செந்தில்குமார், பொதுத்துறை செயலாளர் ஜகந்நாதன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் முதலமைச்சர் வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக 22-1-2022 அன்று 30,744 ஆக இருந்த நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000க்கும் கீழ் குறைந்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதை கருத்தில் கொண்டும், மாநிலத்தின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மாணவ – மாணவிகளின் எதிர்காலம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு ஏதுவாகவும், தமிழ்நாடு அரசால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன.மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடித்து மற்றும் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் தொடர்ந்து தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திடவும், குறைத்திடவும் பின்வரும் கட்டுப்பாடுகள் மட்டும் வருகிற 16ம் தேதி முதல் 2-3-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும்.1. சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும். 2. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.3. இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.மேற்கண்ட கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுபாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன. * நர்சரி பள்ளிகள் மற்றும் மழைலையர் விளையாட்டுப் பள்ளிகள் திறக்க அனுமதியளிக்கப்படுகிறது.* பொருட்காட்சிகள் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது. கொரோனா தொற்றிலிருந்து மக்களை காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளபடி, வருகிற 16ம் தேதி முதல் இதுவரை அறிவிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்பட்டு, வருகிற 16ம் தேதி முதல் 100 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அதன்படி,* அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி அளிக்கப்படும்.* உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 100% வாடிக்கையாளர்களுடன் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.* துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 100% வாடிக்கையாளர்களுடன் செயல்படும்.* கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 100% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.* உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 100% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.* அனைத்து திரையரங்குகளிலும் 100% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.* உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 100% பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும். * அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் 100% பார்வையாளர்களுடன் நடத்த அனுமதிக்கப்படும்.* அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவை ஒரு நேரத்தில் 100% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.* அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் 100 சதவிகிதம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.இதில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா முதல் அலையின்போது நர்சரி பள்ளிகள் மூடப்பட்டது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், 2 ஆண்டுகளுக்கு பிறகு நர்சரி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது….