கமுதி, செப்.30: கமுதி அருகே மாட்டு வண்டி பந்தய உரிமையாளர்கள் மற்றும் வண்டி ஓட்டுநர்கள் சார்பில் பெருநாழியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 67 மாட்டுவண்டி வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பெரியமாடு, சின்னமாடு, பூஞ்சிட்டு என மூன்று பிரிவாக இந்த மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
பெருநாழியில் இருந்து சாயல்குடி சாலை வழியாக நடைபெற்ற இந்த பந்தயத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 67 மாட்டுவண்டி வீரர்கள் பங்கேற்றனர். முதல் ஐந்து இடங்களை பெற்று வெற்றி பெற்ற மாட்டுவண்டி பந்தய வீரர்கள்,சாரதிகளுக்கு ரொக்கப்பணம் குத்துவிளக்கு, செல்போன் நினைவு பரிசு கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தை சாலையின் இருபுறமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து சென்றனர்.