ஈரோடு, செப்.19: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடப்பாண்டில் ரூ.1.95 கோடி மானியம் விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு பள்ளிகளில் கற்றல் சூழல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசின் ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிதியின் மூலம் பள்ளிகளில் மாணவர்களுக்கான கற்றல் சூழல் உருவாக்குதல், பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பான வகுப்பறைகள், சுற்றுச்சுவர், கழிப்பிடங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு மேம்படுத்த பள்ளிகள் செலவு செய்து கொள்ளலாம்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கற்றல் சூழல் உருவாக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடப்பாண்டிற்கான மானியத்தில் 50 சதவீதம் முதல் தவனையாக விடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி தொடக்கநிலை அளவில் 1093 பள்ளிகளுக்கு ரூ.1 கோடியே 33 லட்சம் விடுவிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதேபோல், உயர் தொடக்கநிலை அளவில் 189 பள்ளிகளுக்கு ரூ.62 லட்சம் நிதி மானியமாக விடுவிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.