திருத்தணி, ஏப். 21: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான பெரிய நாகபூண்டியில் சிறப்பு பெற்ற நாகவல்லி சமேத நாகேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து 28ம் தேதி வரை 14 நாட்கள் நடைபெற்று வரும் உற்சவ விழாவில் தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை பூஜைகள், காலை மற்றும் இரவு நேரங்களில் உற்சவர் வாகன சேவைகளில் எழுந்தருளி கிராம வீதிகளில் உலா நடைபெற்று வருகின்றது.
உற்சவ விழாவில் சிறப்பு பெற்ற தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் எழுந்தருளிய நாகவல்லி சமேத நாகேஸ்வரருக்கு மகா தீபாராதனை தொடர்ந்து திருத்தணி முருகன் கோயில் அறங்காவல் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி ஆகியோர் தேர்பவனியை தொடங்கி வைத்தனர்.
இதில் அறங்காவலர்கள் உஷாராவி மோகனன், சுரேஷ்பாபு, நாகன், ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா கணேசன் உள்பட ஏராளமான பக்தர்கள் சிவ பூத வாத்தியங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து சென்று கிராம வீதிகளில் தேர்பவனி நடைபெற்றது. பக்தர்கள், கிராம மக்கள் தேர் மீது மிளகு, உப்பு, மஞ்சள், குங்குமம் தூவி கற்பூர தீப ஆராதனை செய்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.