Thursday, July 4, 2024
Home » பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 91.61 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு: முதலீட்டு பத்திரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 91.61 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு: முதலீட்டு பத்திரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

by kannappan

சென்னை: பெரியபாளையம் பவானியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 91.61 கிலோ தங்ககட்டிகள் வங்கியில் முதலீடு செய்யப்பட்டதற்கான பத்திரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோயில் நிர்வாகிகளிடம் வழங்கினார். சட்டப்பேரவையில் 2021-22ம் ஆண்டிற்கான  அறிவிப்பில், கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற  பலமாற்று பொன் இனங்களில், கோயிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய  இனங்களை மும்பையிலுள்ள ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில்  உருக்கி, சொக்கத்தங்கமாக மாற்றி கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில்  வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து பெறப்படும் வட்டி மூலமாக  கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளை கண்காணிப்பதற்கு 3  மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வுபெற்ற நீதியரசர்கள் தலைமையிலான  குழுக்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும்“ என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் சென்னை மண்டலத்திற்கு உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற  நீதியரசர் துரைசாமிராஜூ தலைமையில் குழு அரசால் அமைக்கப்பட்டது.  இக்குழுவின் முன்னிலையில், பெரியபாளையம், பவானியம்மன் கோயிலுக்கு  பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட பலமாற்று பொன்  இனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, அரக்கு, அழுக்கு, போலிக்கற்கள் மற்றும்  இதர உலோகங்கள் நீக்கப்பட்டு 130 கிலோ 512 கிராம் எடையுள்ள பலமாற்றுப் பொன்  இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டன. இப்பொன் இனங்களை கோயில் பரம்பரை அறங்காவலர்  தீர்மானத்தின் அடிப்படையில் மும்பையிலுள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி தூய தங்கக் கட்டிகளாக மாற்றி பாரத ஸ்டேட் வங்கியில்  தங்கப் பத்திரமாக முதலீடு செய்திடும் பொருட்டு, 91 கிலோ 61 கிராம் எடையுள்ள  தூய தங்கக்கட்டிகள் கோயில் நிர்வாகத்தின் மூலம் பெரியபாளையம் பவானியம்மன்  கோயில் பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, மும்பை கிளையில் முதலீடு செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.46 கோடியே 31 லட்சம்  ஆகும். மேற்படி தங்க மதிப்பீட்டிற்கு வழங்கப்படுகின்ற வட்டி வீதம் 2.25%  ஆகும். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு கிடைக்கப்பெறும் வட்டித்தொகையான ரூ.1.04  கோடி கோயில் சார்ந்த திருப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும். இந்நிலையில், இதற்கான தங்க முதலீட்டு பத்திரத்தினை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் கோயில் நிர்வாகிகளிடம் வழங்கினார். நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் துரைசாமி ராஜூ, அறநிலையத்துறை செயலாளர் சந்தரமோகன், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன், வேலூர் மண்டல இணை ஆணையர் லட்சுமணன், கோயில் பரம்பரை அறங்காவலர் அஞ்சன் லோகமித்ரா மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்….

You may also like

Leave a Comment

two × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi