ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் ஊராட்சியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய நீர்த்தேக்க தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால், அதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் ஊராட்சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, பஸ் நிலையம் பின்புறம் 40 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. கட்டும் போதே இதை, செயல்படுத்தும் ஆப்ரேட்டர்களுக்கு என தனி அறையும் இந்த நீர்த்தேக்க தொட்டியின் கீழ் தளத்தில் கட்டப்பட்டது. இதில் அவர்கள் தங்கி வந்தனர். இந்த நீர்த்தேக்க தொட்டியிலிருந்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.ஆனால், தற்போது தொட்டியின் சிமெண்ட் சிலாப்புகள் உடைந்து சேதம் ஏற்பட்டது. செடிகொடிகள் வளர்ந்து தொட்டி விரிசலும் ஏற்பட்டது. இதனால் கடந்த 20 வருடமாக குடிநீர் தொட்டி பயன்பாடில்லாமல் உள்ளது. இதில் ஆப்ரேட்டர்கள் கூட யாரும் வசிப்பதில்லை. தற்போது, இந்த குடிநீர் தொட்டியின் கீழ் இரவு நேரங்களில் குடிகாரர்கள் மது அருந்துகிறார்கள் . மேலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த தொட்டி விழக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, பழைய குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பெரியபாளையம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள குடிநீர் தொட்டி, ஆப்ரேட்டர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டது. இது கடந்த 20 வருடமாக பயனற்ற நிலையில் உள்ளது. ஆனால், இதற்கு பதில் புதிதாக வேறு குடிநீர் தொட்டியும் கட்டப்பட்டு விட்டது. பழைய குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என பெரியபாளையம் ஊராட்சி. எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பல முறை மனு கொடுத்துள்ளோம். மேலும் கிராம சபை கூட்டத்திலும் இது குறித்து தெரிவித்து குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என பல முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும் என கூறினர்….
பெரியபாளையம் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி: அகற்ற வலியுறுத்தல்
previous post