ஊத்துக்கோட்டை, செப். 14: பெரியபாளையம் அருகே, ஏனம்பாக்கம் கிராமத்தில் ₹5.25 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு நிலங்கள் மீட்கப்பட்டன. பெரியபாளையம் அருகே, ஏனம்பாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் வீடுகள் மற்றும் நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக நீதிமன்ற உத்தரவுப்படி, திருவள்ளூர் கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஊத்துக்கோட்டை தாசில்தார் மதன் தலைமையில் பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் அற்புதராஜ், வருவாய் ஆய்வாளர் கீதா, விஏஒ சற்குணம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரம் மூலம் அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டியிருந்த 12 வீடுகள் மற்றும் 14.59 ஏக்கர் நிலங்களை நேற்று முன்தினம் வருவாய்த்துறையினர் மீட்டனர். மேலும், இவற்றின் மதிப்பு சுமார் ₹5.25 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அக்கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.