ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் குடியேறியவர்களின் வீடுகளை அதிகாரிகள் மீண்டும் அகற்றினர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தில் கூலி வேலை செய்யும் பெண்கள் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தனர். ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ளுமாறு பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டு புறம்போக்கு நிலத்தில் வசித்து வரும் 3 பேருக்கு வருவாய்த்துறை சார்பில் மாற்று இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் நெடுஞ்சாலை இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர். இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் 3 குடும்பத்தினரும் மீண்டும் குடிசை அமைத்தும் இரும்பு கொட்டகை அமைத்தும் குடியேறினர். இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் காவல்துறை உதவியோடு மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்ட குடிசைகளை பொக்லைன் இயந்திரங்கள் உதவியோடு இடித்து அப்புறப்படுத்தினர். முன்னதாக, குடிசைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த வீட்டின் உரிமையாளர்கள் காவல் துறையினர் அப்புறப்படுத்த முயன்றபோது இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதில், உதவி கோட்ட பொறியாளர் ஆண்டி, உதவி பொறியாளர் சந்திரசேகரன், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் ரமேஷ், துணை வட்டாட்சியர் நடராஜன், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி, பெரியபாளையம் காவல் துறை ஆய்வாளர் தரணீஸ்வரி ஆகியோரின் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி எச்சரிக்கை பலகை வைத்தனர்….