பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். கரூரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் முனியப்பன் என்பவர் குடும்பத்தினருடன் சொந்த ஊரான சீர்காழி நோக்கி காரில் சென்றுள்ளார். அப்போது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் எறையூர் அருகே சென்றுகொண்டிருந்த போது போக்குவரத்து நெரிசல் காரணமாக மற்றோரு வாகனத்திற்கு பின்னால் காரை நிறுத்தியுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த லாரி முனியப்பனின் காரில் பின்னால் மோதியது. இரண்டு வாகனங்களுக்கு நடுவே சிக்கிய கார் உருக்குலைந்து போனது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த முனியப்பனின் மனைவி கலைவாணி, மகள் ஹரிணி, தாய் பழனியம்மாள் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். முனியப்பன் மருத்துவமனையில் உயிரிழந்தார். 6 வயது ஹரி மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். …