பெரம்பலூர், செப்.27: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதலாமாண்டு மருத்துவ மாணவர்களை வரவேற்கும் விழா நேற்று முன் தினம்(25ம்தேதி) மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து பேசினார். விழாவில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் நிவாணி கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் டாக்டர் விஜயன், மருத்துவக் கல்லூரி பிசியோலஜி துரை தலைவர் டாக்டர்.ராஜ்குமார், மருத்துவமனை இணை மருத்துவ கண்காணிப்பாளர் பானுமதி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் வேந்தர் பேசுகையில், மருத்துவம் என்பது கடவுளுக்கு நிகரான ஒரு துறை அத்தகைய துறையை தேர்ந்து எடுத்து உள்ள மாணவர்கள் அனைவரும் பாக்கியசாலிகள் ஆவீர்கள். தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் தன்னிறைவு பெற்ற ஒரு மருத்துவக்கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் படிப்பதற்கு உங்களுடைய பெற்றோர்கள் எண்ணற்ற கனவுகளுடன் இங்கு உங்களை அனுப்பியுள்ளனர். இன்று முதல் உங்களுடைய தலையாய கடமை என்னவென்றால் அவர்களுடைய கனவை நினைவாக்குவது தான். மாணவர்கள் அனைவரும் உங்களுடைய பெற்றோர்கள் மீது அளவுகடந்த அன்பு மற்றும் மரியாதையை கொள்ள வேண்டும்.
உங்களுடைய கவனம் முழுவதும் படிப்பில் மட்டுமே செலுத்த வேண்டும். வகுப்பறையில் ஆசிரியர்கள் தங்களுக்கு கற்பிக்கும் பாடத்தை சிறு மணி துளி கூட தவறவிடாமல் கவனிக்க வேண்டும் அதுவே நீங்கள் மருத்துவர் ஆகுவதற்கான முதல் செயல் மற்றும் வழியாகும். வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி பெறுவதற்கு சத்தியத்திற்கும் தர்மத்திற்கும் உண்மைக்கும் கட்டுப்படவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் நிவாணி கதிரவன் பேசுகையில்,வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது மிக சிறந்த புத்திசாலித்தனம், மருத்துவ துறையில் உங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளையும் பயன்படுத்தி அதன்வழியே கற்று நீங்கள் வளர வேண்டும். இந்த துறையில் நீங்கள் மகத்தான சாதனைகள் புரிய என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார். முன்னதாக தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் விஜயன் வரவேற்றார். பிசியோலஜி துறை தலைவர் டாக்டர்.ராஜ்குமார்நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 250 பேர் ஹிப்போக்ரடிக் உறுதிமொழி எடுத்து கொண்டனர். தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழும சார்ந்த முதல்வர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.