பெரம்பலூர்: கடந்த 10 மாதங்களுக்கு முன் இறந்த தாயின் உடலை அவரது மகன் சுடுகாட்டில் இருந்து தோண்டி எடுத்து வந்து வீட்டில் வைத்திருந்த சம்பவம் பெரம்பலூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி மூக்காயி. இவர்களது மகன் பாலமுருகன்(38). கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு வேலு இறந்து விட்டதால் பாலமுருகன், தனது தாய் மூக்காயியுடன் வசித்துள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மூக்காயியும் இறந்துவிட்டார். தாய், தந்தை இருவரும் இறந்ததால் பாலமுருகன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். தாய் புதைக்கப்பட்ட இடத்திற்கு பாலமுருகன் தினமும் சென்று அங்கு உட்கார்ந்து தனக்குத்தானே பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 23ம் தேதி நள்ளிரவு சுடுகாட்டுக்கு சென்ற பாலமுருகன், அங்கு மூக்காயி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டியுள்ளார். பின்னர் எலும்பு கூடாக இருந்த அவரது உடலை வெளியே எடுத்துள்ளார். நேற்றுமுன்தினம் அதிகாலை ஊராட்சியின் குப்பை வண்டியில் வைத்து வீட்டிற்கு கொண்டு வந்து தாயின் எலும்பு கூடை பத்திரப்படுத்தி உள்ளார். நேற்றுமுன்தினம் இரவு 8 மணி அளவில் பாலமுருகனின் உறவினர் சுமதி, அவருக்கு சாப்பாடு கொடுக்க வந்தார். அப்போது வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதில் சந்தேகமடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு எலும்புகூடு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து குன்னம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், வீட்டில் இருந்தது மூக்காயின் எலும்புகூடு தானா என கண்டறிய அதை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் அந்த எலும்பு கூடு புதைக்கப்பட உள்ளது….