பெரம்பலூர்: பெரம்பலூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட துறையூர் சாலையில் உள்ள களரம்பட்டி பகுதியில் வனச்சரகர் பழநிகுமரன் தலைமையில் வனவர்கள் பிரதீப்குமார், குமார், வன காப்பாளர் ராஜீ, வனக்காவலர் அறிவுச்செல்வன் ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். தாமரைக்குளத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்துக்கு இடமாக 2 பேர் துப்பாக்கிகளை வைத்து கொண்டு வனவிலங்குகளை வேட்டையாட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதில், பெரம்பலூர் செஞ்சேரியை சேர்ந்த தங்கராசு மகன் கலைச்செல்வன்(32), லாடபுரத்தை சேர்ந்த ரமேஷ்(30) ஆகியோர் என்பதும், இவர்கள் உரிமம் இல்லாத கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழும், உரிமம் இல்லாமல் கள்ள துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றத்துக்காகவும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர். பின்னர் பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் 2 பேரையும் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் கூறுகையில், வனவிலங்குகளை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். சட்டத்தை மீறி பெரம்பலூர் மாவட்ட வனப்பகுதிகளில் வன விலங்குகளை இறைச்சிக்காகவோ, இதர காரணங்களுக்காகவோ வேட்டையாடினால் கடுமையான தண்டனை பெற்று தரப்படும் என்றார்….