பெயிண்டருக்கு கொலை மிரட்டல்: 3 பேர் அதிரடி கைது

புதுச்சேரி, ஜன. 18: பெட்ரோல் பங்க் அருகே பெயிண்டரை ஓடஓட விரட்டி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையின்போது தப்பிக்க முயன்ற ரவுடியின் கை முறிந்த நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். புதுச்சேரி திலாசுபேட்டை வீமன் நகரைச் சேர்ந்தவர் சிவகேசவன் மகன் தமிழரசன்(24). பெயிண்டரான இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் கார்த்தி (24) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சம்பவத்தன்று தமிழரசன், கதிர்காமத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பியுள்ளார். அப்போது அங்கு ஒரே பைக்கில் வந்த கார்த்தி மற்றும் கூட்டாளிகள் 3 பேர், தமிழிரசனை ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது.

இதை அவர் தட்டிக் கேட்கவே ஆத்திரமடைந்த கும்பல் அவரை தாக்க வந்த நிலையில் தமிழரசன் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார். அப்போது அவரை பைக்கில் துரத்திச் சென்ற கும்பல், கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தலைமறைவாகி விட்டது. இதுதொடர்பாக கோரிமேடு காவல் நிலையத்தில் தமிழரசன் புகார் செய்தார். அதன்பேரில் கோரிமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து திலாசுபேட்டை கார்த்தி, அவரது கூட்டாளிகளான வினோத் (23), ஆகாஷ் (24), விஜய் (24) உள்ளிட்டோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத 3 பிரிவுகளின்கீழ் வழக்குபதிந்த போலீசார், விஜய்யை தவிர மற்ற 3 பேரையும் கைது செய்தனர். கைதான கும்பல் மீது திருட்டு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில், கார்த்தியை போலீசார் கைது செய்ய முயன்றபோது, அவர் தப்பிக்க முயன்றதில் தவறி கீழே விழுந்தில் அவரது கையில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக போலீசார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் தலைமறைவான விஜய்யை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி