சேலம், ஜன.3: சேலம் மரவனேரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (24), பெயிண்டர். இவர் மேளம் அடிக்கும் தொழிலும் செய்து வருகிறார். இவரிடம், ஜான்சன்பேட்டை மேற்கு தெருவை சேர்ந்த கீர்த்திராஜா(23), கிழக்கு தெருவை சேர்ந்த அஜித் (எ) கருப்புஅஜித்(24), ஜான்சன்பேட்டை ஜீவா (எ) ஜீவானந்தம்(20) ஆகியோர் கடந்த 31ம் தேதி புத்தாண்டு கொண்டாடுவதற்காக மேளம் கேட்டுள்ளனர். ஆனால் சீனிவாசன் கொடுக்க மறுத்து விட்டார். இதனிடையே அன்றிரவு காக்காயன் சுடுகாடு அருகே புத்தாண்டு கொண்டாடுவதற்காக சீனிவாசன் தயாராகி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கீர்த்திராஜா, அஜித், ஜீவா ஆகியோர் சீனிவாசனிடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில், கத்தியை எடுத்து சீனிவாசனின் வயிற்றில் குத்தினர். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் விசாரணை நடத்தி, அஜித், ஜீவா ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள கீர்த்தி ராஜாவை தேடி வருகின்றனர்.