பெண் தூய்மை பணியாளர் வீட்டில் 3 சவரன் திருட்டு போலீசார் விசாரணை செய்யாறு அருகே மர்ம ஆசாமிகள் துணிகரம்

செய்யாறு, ஜூன் 4: செய்யாறு அருகே பெண் தூய்மை பணியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பில்லாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி கீதா(40). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கீதா அதே கிராமத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் 31ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு காஞ்சிபுரம் அடுத்த சிறுவாக்கம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு தனது மகன்களுடன் சென்றார். இந்நிலையில், நேற்று காலை கீதா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கீதாவிற்கு போன் செய்து தகவல் கொடுத்தனர். அதன்பேரில், கீதா உடனே வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தது. மேலும், அதில் வைத்திருந்த 3 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை