சென்னை: பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தடயவியல் அறிக்கை 3 வாரங்களில் கிடைத்துவிடும் என்பதால், புலன்விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய 6 வார அவகாசம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்த விசாரணை அதிகாரி கோரிக்கை வைத்தார். அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், பாலியல் தொல்லை புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாகா குழு தனது அறிக்கையை ஏற்கனவே உள்துறை செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கின் புலன் விசாரணையை முடித்து 6 வாரங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 30ம் தேதிக்கு தள்ளி வைத்தார்….