பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்; முன்னாள் ஐஜி தொடர்ந்த வழக்கு மீண்டும் விசாரணை.!

சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறையின் முன்னாள் ஐஜி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கின் விசாரணையை ஜனவரி 28ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை ஐஜி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதே துறையில் பணியாற்றி வந்த பெண் எஸ்பி, கடந்த 2018ம் ஆண்டில் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் பெண் எஸ்பி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பெண் எஸ்பி கொடுத்த புகார் மீது சிபிசிஐடி விசாரணை நடத்தலாம் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஐ.ஜி. மேல்முறையீடு செய்தார். மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, சிபிசிஐடி மற்றும் விசாகா குழு விசாரணைகளை தெலங்கானா மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டதுடன் விசாரணை அறிக்கைகளை 6 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாலியல் புகார் தொடர்பான வழக்கு விசாரணையை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, 2019ல் ஐ.ஜி. தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, ஜெ.சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரியதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை