சென்னை: பூ வாங்குவது போல் நடித்து மூதாட்டியிடம் 7 சவரன் செயினை பறித்துகொண்டு தப்பிசென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வேளச்சேரி அடுத்த நன்மங்கலம், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலு. இவரது, மனைவி ஹேமாவதி (50). இவர்கள், அதேபகுதியில் பூ வியாபாரம் செய்கின்றனர். நேற்று அதிகாலை ஹேமாவதியின் வீட்டுக்கு 2 மர்ம நபர்கள் வந்து, ‘‘தங்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு பூக்கள் வேண்டும்’’ என கேட்டுள்ளனர். அதற்கு ஹேமாவதி, ‘‘தன்னிடம் அந்தளவு பூ தற்போது இல்லை. எனவே, காத்திருங்கள் ஏற்பாடு செய்து தருகிறேன்’’ என்றார். பின்னர், தனது கணவரிடம் மற்றொரு பூ வியாபாரியிடம் கூடுதல் பூ வாங்கி வரும்படி வெளியே அனுப்பி வைத்துள்ளார்.அவர் வெளியே சென்றதும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள், ஹேமாவதியின் முகத்தில் மிளகாய்பொடி தூவி அவர் அணிந்திருந்த 7 சவரன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் 2 மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்….