திண்டுக்கல், ஜூலை 18: திண்டுக்கல் மாவட்டத்தில் பூக்கள் சாகுபடி பிரதானமாக உள்ளது. திண்டுக்கல் அருகே உலகம்பட்டி, கருங்கல்பட்டி, மறவபட்டி, பிறகரை, தாடிக்கொம்பு, குட்டத்துப்பட்டி, குட்டத்து ஆவாரம்பட்டி, பொன்மாந்துறை புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் மல்லிகைப்பூ, சம்பங்கி, செவ்வந்தி, கனகாம்பரம் பூக்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் தற்போது உலகம்பட்டி பகுதியிலுள்ள தோட்டங்களில் கனகாம்பரம் பூக்கள் பூத்து குலுங்குகின்றன.
இங்கு விளைவிக்கப்படும் கனகாம்பரம் பூக்கள் திண்டுக்கல், நிலக்கோட்டை பூ மார்க்கெட்டுக்கு நேரடியாக விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கிருந்து நேரடியாக வியாபாரிகள் கொள்முதல் செய்து வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். நேற்று திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.