பூத்து குலுங்கும் செண்டி பூக்கள் அரிமளம் பகுதியில் விபத்தை குறைக்கும் வகையில் கூடுதல் வேகத்தடை அமைக்க வேண்டும்

திருமயம்,ஜூன் 25: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் இருந்து செங்கீரை வழியாக ராயவரம் செல்லும் சாலை மாவட்டத்தில் உள்ள பிரதான சாலைகளில் ஒன்று. இந்த சாலைகளில் கடந்த சில ஆண்டுகளாக வாகன போக்குவரத்து, டிப்பர் லாரிகளின் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அரிமளம் பகுதியில் அவ்வப்போது விபத்துக்கள் நடைபெறுவதாக புகார் எழுந்து வந்தது. இதனிடையே கடந்த வாரம் அரிமளத்தில் சம்பந்தப்பட்ட பகுதியில் டிப்பர் லாரி மோதி ஒருவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது விபத்து ஏற்பட்ட பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மனு கொடுப்பதன் மூலம் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் அரிமளம் பகுதியைச் சேர்ந்த மக்கள் அரிமளம் மாமரத்து பஸ்ஸ்டாப், சேர்வராயன் பாலம் ஆகிய இரண்டு இடங்களிலும் விபத்தை குறைக்கும் வகையில் வாகன வேகத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அதேபோல் அரிமளம் பகுதியில் வர்ணம் பூசப்படாமல் உள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் மனு அளித்து பல நாட்களைக் கடந்த நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். எனவே இனிமேலாவது அப்பகுதி மக்கள் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட பகுதியில் வேகத்தடை அமைக்கப்படும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு