தூய ரமலான் எனும் புண்ணிய மாதம் பூத்துக் குலுங்கத் தொடங்கிவிட்டது. இதர மாதங்களுக்கு இல்லாத உயர்வும் சிறப்பும் கண்ணியமும் புண்ணியமும் இந்த மாதத்திற்கு எப்படி வந்தது?இந்தப் பேரண்டத்தையும் தில் ஏராளமான படைப்பினங்களையும் உருவாக்கிய இறைவன், படைப்புகளிலேயே மிகச் சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்தான். ‘ஆறாம் அறிவு’ எனும் பகுத்தறிவு உட்பட, அனைத்து ஆற்றல்களையும் மனிதனுக்கு வழங்கினான்.இவ்வாறு படைத்த இறைவன், மனிதனை அழைத்து,“இதோ பார், நீ வாழ்வதற்குத் தேவையான ஆற்றல்களை எல்லாம் உனக்கு வழங்கிவிட்டேன். இனி நீயாகவே சமர்த்தாகப் பிழைத்துக்கொள்” என்று கூறி கைவிட்டுவிடவில்லை.தான் படைத்த மனித குலத்துக்கு நேர்வழி காட்டும் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டான். மனிதர்களுக்காக சில ஆழமான அடித்தளங்களைக் கொண்ட ஓர் இறைநெறி (“தீன்”) எனும் வாழ்வியலைஅருளினான்.இந்த வாழ்வியலை முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட மனிதர்களிலிருந்தே தன்னுடைய திருத்தூதர்களை நியமித்தான் இறைவன்.திருத்தூதர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வருகை தந்தனர். அந்தந்தக் கால கட்டத்திற்கு ஏற்பத் தேவையான சட்டங்களையும் (ஷரீஅத்) இறைவனே தன் தூதர்கள் மூலம் அருளி வந்தான்.இறைத்தூதர்களுக்கு இந்த வாழ்வியல் அடிப்படைகளையும் ஷரீஅத் சட்டங்களையும் இறைவன் அருளினான் அல்லவா, அதைத்தான் “வேதம்” என்கிறோம்.முந்தைய சமுதாயங்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அந்தந்தக் கால கட்டத்திற்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். அவர்களுக்கு அருளப்பட்ட வேதங்களும் அந்தந்தக் கால கட்டங்களுக்கு மட்டுமே அருளப்பட்டன. ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் இறுதித்தூதராய் ஒருவரை அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டது. அதேபோல் மனிதகுலம் முழுவதற்கும் வழிகாட்ட ஓர் இறுதிவேதம் அருளப்பட வேண்டிய தேவையும் இருந்தது.மனிதகுலம் அனைத்திற்கும் ஓர் அருட்கொடையாய் வந்துதித்த இறுதித்தூதர்தாம் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள். அவருக்கு அருளப்பட்ட இறுதிவேதம்தான் திருக்குர்ஆன்.இந்தப் புனிதத் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம்தான் ரமலான். இறுதித்தூதர் முஹம்மத், மக்காவில் உள்ள ‘ஹிரா’ எனும் குகையில் இறைதியானத்தில் மூழ்கியிருந்தபோது வானவர் அவர் எதிரில் தோன்றி, குர்ஆன் வசனங்களை அருளினார்.மனிதகுலத்திற்கு நேர்வழி காட்டும் குர்ஆன் அருளப்பட்ட இந்த மாதம் முழுக்க நோன்பு நோற்கும்படி இறைவன் கட்டளையிட்டான். அதனால்தான் இந்தப் புண்ணிய மாதத்தில் நோன்பு எனும் உயர்வழிபாட்டைக் கடைபிடிக்கிறோம்.- சிராஜுல்ஹஸன்…