Sunday, September 29, 2024
Home » பூதப்பாண்டி அருகே குடும்பத்தை அவதூறாக பேசியதால் பெயிண்டரை கொன்றேன் கைதான வாலிபர் வாக்குமூலம்

பூதப்பாண்டி அருகே குடும்பத்தை அவதூறாக பேசியதால் பெயிண்டரை கொன்றேன் கைதான வாலிபர் வாக்குமூலம்

by Karthik Yash

பூதப்பாண்டி, ஆக.24: குடும்பத்தை அவதூறாக பேசி ஆபாசமாக திட்டியதால் வெட்டி கொன்றதாக பூதப்பாண்டி பெயிண்டர் கொலையில் கைதான வாலிபர் கூறி உள்ளார். பூதப்பாண்டி அருகே நாவல்காடு நம்பியான்குளம் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் என்ற நெல்சன் (49). பெயின்டர். இதே பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் (43). விவசாயி. ராபர்ட் வீடு அருகே ரிச்சர்ட்டின் சகோதரி வீடு உள்ளது. ராபர்ட்டுக்கும், ரிச்சர்ட் சகோதரிக்கும் இடையே இட பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையில், தனது சகோதரிக்கு ஆதரவாக ரிச்சர்ட் சென்றார்.

இதனால் ராபர்ட், ரிச்சர்ட் இடையே முன் விரோதம் இருந்தது. ஏற்கனவே இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ராபர்ட், ரிச்சர்ட் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரிச்சர்ட் அரிவாளால் ராபர்ட்டை சரமாரியாக வெட்டினார். இதில் ராபர்ட் பரிதாபமாக இறந்தார். பின்னர் ரிச்சர்ட், பூதப்பாண்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்த கொலை தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் விசாரணை நடத்தி, ரிச்சர்ட்டை கைது செய்தனர். கைதான ரிச்சர்ட், போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

ராபர்ட்டும், நாங்களும் உறவினர்கள் ஆவோம். ராபர்ட் வீடு அருகே தான் எனது சகோதரி வீடு உள்ளது. தொடர்ந்து எங்களுடன் ராபர்ட் தகராறு செய்து வந்தார். ஏற்கனவே இந்த பிரச்சினை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளோம். ஆனாலும் தொடர்ந்து ராபர்ட் தகராறு செய்தவாறு இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று திருமண வீட்டில் வைத்து என்னிடம் தகராறு செய்தார். அப்போது என்னையும், எனது குடும்பத்தையும் அவதூறாக பேசி ஆபாசமாக திட்டினார். இதனால் நான் ஆத்திரம் அடைந்தேன். தொடர்ந்து தகராறு செய்வதால் ராபர்ட்டை ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்து திருமண மண்டபத்துக்கு வெளியே காத்திருந்தேன். அந்த சமயத்தில் ராபர்ட் வெளியே வந்தார். அப்போது ஏற்கனவே திருமண வீட்டில் வாழை இலை நறுக்குவதற்காக வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்து சரமாரியாக வெட்டினேன். பின்னர் போலீசுக்கு பயந்து காவல் நிலையத்தில் வந்து சரண் அடைந்தேன். இவ்வாறு அவர் கூறி உள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நாவல்காடு பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

You may also like

Leave a Comment

6 + 20 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi