அவிநாசி, மே 27: அவிநாசி காசிக்கவுண்டன்புதூர் மகாநகர் அப்புசாமிக்கவுண்டர் மகன் மயில்சாமி (50). இவர் கடந்த 24ம் தேதி சேவூர் ஆலத்தூரில் தங்கியிருக்கும் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வீட்டை பூட்டிவிட்டு ஆலத்தூர் சென்று, இரவு அங்கேயே தங்கியுள்ளார்.நேற்று காலை ஆலத்தூரிலிருந்து பெருந்துறை வேலைக்கு சென்றுவிட்டு, தனது மனைவி மற்றும் மகன்களுடன் நேற்று மாலை வீடு திரும்பினார்.அப்போது வீட்டின் பூட்டு இல்லாமல் முன்பக்க கேட் திறந்து இருந்தது. வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு திறந்திருந்தது. பெட்ரூமில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் கீழே சிதறி கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்கச்செயினை திருடு போயிருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக புகாரின்பேரில், அவிநாசி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.