பூட்டிய வீடுகள் தகவல் பெற புதிய செயலி போலீஸ்: கமிஷனர் தகவல்

 

கோவை, ஜன.5: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று கூறுகையில், ‘‘ கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பெரும்பாலானோர் வீடுகளை பூட்டி வெளியூர் செல்லும் போது போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது இல்லை. போலீசார் ரோந்து செல்லும்போது பூட்டிய வீடுகளை பார்த்தால் அந்த வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர். சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க தெரியாமல் விட்டு விடுகின்றனர்.

சிலர் ஒன்றும் நடக்காது என்ற நம்பிக்கையில் தகவல் தெரிவிப்பதில்லை. பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும் முறையை எளிமைப்படுத்த புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூலம் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால், பூட்டிய வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும், கொள்ளை சம்பவங்களை தடுக்க முடியும். கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் விபத்துக்களை, 10 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் விபத்து ஏற்பட்டால், காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், சற்று தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். இதனால் சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது. கோவையில், 10 மருத்துவமனைகளில் இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம், 48 மணி நேரம் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதன் மூலமாக விபத்து உயிரிழப்புகளை குறைக்க முடியும். நடப்பாண்டில் குற்ற சம்பவங்களை குறைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. போலீசார் குறுகிய தெருக்களில் ரோந்து செல்ல கடந்த ஆண்டு இரண்டு ஆட்டோக்கள் வாங்கப்பட்டது. தற்போது அதேபோல கூடுதலாக, 5 ஆட்டோக்கள் வாங்கப்படும்’’ என்றார்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி