Sunday, September 29, 2024
Home » புல்லட்டுக்கு ஊதுகுழலாக மாறிய இலை கட்சியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

புல்லட்டுக்கு ஊதுகுழலாக மாறிய இலை கட்சியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by kannappan

‘‘கட்சியின் பெண் தலைவர் இறந்த பிறகு இலை கட்சி மாநிலத்துக்கு ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறதாமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘புதுச்சேரியில் இலைக்கட்சி கடந்த தேர்தலில் வாஷ் அவுட் ஆகிவிட்டதால், அக்கட்சியினர் தமிழகத்தில் உள்ள ராயப்பேட்டை தலைமையின் மீது அதிருப்தியில் இருந்தனர். நம்மை தாமரை கட்சியிடம் இப்படி அடமானம் வைத்துவிட்டார்கள்… தமிழகத்தில் தாமரைக்கு காவடி தூக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று வேதனையில் புலம்பிக் கொண்டு இருக்கிறார்களாம். இப்படியே போனால் புதுச்சேரியிலும், தமிழகத்திலும் இலை காணாமல் போய்விடும் என்று ஓபனாக பேசி வர்றாங்க. அது தெரிந்தும் இரண்டு தலைமையும் இப்போதைக்கு நாம எதிர்கட்சியாகவே இருக்கிறோம். எனவே, அட்ஜஸ் செய்து கொண்டு அமைதியாக இருப்பதுதான் புத்திசாலிதனம் என்று சொல்கிறார்களாம். அதனால, புல்லட்சாமியை ஆதரித்து அறிக்கை விட்டு தங்களின் இருப்பை தற்போதுவரை காட்டிக்கொள்கிறார்களாம். கூட்டணி கட்சிக்கு ஆதரவாக அறிக்கை விடுவதில் தமிழகத்தைவிட புதுச்சேரி மிகவும் முன்னணியில் இருக்கிறது. இதனால நிர்வாகிளுக்கு தான் லாபம். தொண்டர்கள் வழக்கம்போல காய்ந்து கொண்டிருக்கிறார்கள். கதர் கட்சியின் நாசா, புல்லட்சாமியின் ஆட்சி குறித்து புகார் கூறினால், உடனே புல்லட்சாமியின் வாய்ஸ் ஆக மாறிக்கொள்கிறாராம் இலைக்கட்சியின் செயலர் ஒருவர். சொந்த கட்சியை வளர்க்க உருப்படியாக ஏதாவது செய்யுங்கப்பா, என கட்சிக்காரர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தற்போது தேஜ கூட்டணி அரசின் செய்தி தொடர்பாளர் என்ற அளவில் இலைகட்சி மாறிவிட்டதாம், இலை கட்சியின் கொள்கை, கட்சி நிலைப்பாட்டை தாண்டி கூட்டணி கட்சியை ஆதரிப்பதில் முழு நேர கவனம் செலுத்துகிறார்களாம். இலையின் பார்வையில் கருத்து சொல்லாமல், புல்லட்சாமி எது செய்தாலும் ஆதரிப்பேன் என்கிற அளவுக்கு இலைக்கட்சி மாறிவிட்டதாம்… இப்படியே போனால் புதுச்சேரியில் இலை கட்சிக்கு முதலில் சங்கு ஊதிடுவாங்க…’’ என்று இலை கட்சியினர் பேசிக்கிறாங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மாஜி இலை மந்திரி கொடுத்த தைரியத்தால் கான்டிராக்டர்கள் ஓவராக ஆடிட்டாங்களாமே, அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் பொதுப்பணித்துறையில் விஏஓ அலுவலக கட்டிடங்களை பழுது பார்க்க குறைந்தபட்சம் ரூ. 2 லட்சம் கடந்த இலை ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாம். இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை கொண்டு, விஏஓ அலுவலக கட்டிங்களை பழுது பார்க்காமல் மாஜி அமைச்சரான ‘மணியானவர்’ ஆசியுடன் இலை கட்சியை சேர்ந்த ஒப்பந்தக்காரர்கள் சுருட்டியுள்ளனர். விஏஓ அலுவலக கட்டிடமே ‘பழுதுபார்க்கும்’ தொகையில் கட்டி முடித்து விடலாம். ஆனால், ஏற்கனவே உள்ள கட்டிடத்தை பழுதுபார்க்க இவ்வளவு தொகையா என பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளானாங்களாம். இப்படி கடலோர மாவட்டத்தில் மட்டும் 10 விஏஓ அலுவலக கட்டிடத்தை பராமரிப்பு செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் அந்த நிதியை இலைகட்சி ஒப்பந்தகாரர்கள் அப்படியே சுருட்டியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாம். இதை அதிகாரிகள் தோண்டி எடுத்து அந்த பணத்தை வசூலிக்க முடிவு செய்து இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘அரசு பள்ளிகளில் எதுவும் கிடைக்காது என்று தனியார் பள்ளிக்கு தாவிய அதிகாரியின் கதையை சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர் மாவட்டத்துல சீப் கல்வி அதிகாரியாக பெயரின் முடிவில் சாமியை கொண்டவர் பணிபுரிந்து வருகிறார். மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு பள்ளிகள்ல இருந்து பல்வேறு புகார்கள் வந்துகொண்டிருக்கிறதாம். அந்த புகார்கள் மீது சீப் கல்வி அதிகாரி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குறதில்லையாம். அரசு பள்ளிகளில் ஆய்வு செய்து, அதன் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டிய கல்வி அதிகாரி, தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்ய ஆர்வம் காட்டி வர்றாராம். அதுக்கு காரணம் அதுல ஏதோ சம்திங் இருக்குதாம். எனவே தான், தனியார் பள்ளிகளுக்கு போய், ஆய்வு செய்ய ஆர்வம் காட்டுறாராம். அரசு பள்ளிகள்ல இருந்து வர்ற புகார்களுக்கு, அவருக்கு லோ கிரேட் அதிகாரிங்களை அனுப்பி வெச்சிடுறாருன்னு, அந்த துறை சார்ந்த பணியாளருங்க மத்தியில பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கோவை மேட்டர் ஏதாவது இருக்கா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சி தலைவராக, மருது என துவங்கும் பெயர் கொண்ட நபர் உள்ளார். இவர், இலைக்கட்சியை சேர்ந்தவர். இப்பேரூராட்சி தலைவர் பதவியை பிடிக்க இவர் செய்த அண்டர்வேல்ர்ட் வேலைகள் அதிகம். எதிர்கட்சியினர் தங்களது கவுன்சிலர்களை கடத்தி சென்றுவிடக்கூடும் எனக்கருதி, முன்கூட்டியே உஷாராகி, இலை கவுன்சிலர்கள் 8 பேர், சுயேட்சை கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 9 பேரை கடத்திச்சென்று, கோவை புறநகர் பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் அடைத்து வைத்தார். ஓட்டுபோடும் நேரத்தின்போது மட்டும் இவர்களை பஸ்சில் அழைத்து வந்து, ஓட்டுப்போட வைத்துவிட்டு, மீண்டும் ரிசார்ட்டுக்கே அழைத்துச்சென்று விட்டார். இப்படி கவுன்சிலர்களை கைக்குள் போட்டு வைத்துள்ள இவர், பேரூராட்சி ஊழியர்களையும் தனது கைக்குள் போட்டுக்கொண்டு, சொந்தவேலை, கட்சி வேலை என விதிமீறலில் ஈடுபடுகிறார். கட்சி நிர்வாகிகளுக்கு கடிதம் டைப் செய்தல், கட்சி கூட்டத்துக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தல், சால்வை, நினைவுப்பரிசு உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்தல் என பல பணிகளுக்கு இப்பேரூராட்சி ஊழியர்களை பயன்படுத்துகிறார். குறிப்பாக, கணினி பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் இவரது கைக்குள் உள்ளனர். இதனால், இப்பேரூராட்சியில் அன்றாட அரசுப்பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர், பேரூராட்சி செயல்அலுவலரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் மனு கொடுத்தும், பலன் இல்லையாம்…’’ என்றார் விக்கியானந்தா….

You may also like

Leave a Comment

1 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi