கோவை, ஜூன் 22: கோவை புலியகுளம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம், பி.எஸ்.சி கணினி அறிவியல், கணிதம், பி.ஏ ஆங்கிலம், தமிழ் ஆகிய 5 பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு நடப்பாண்டில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த மே 24-ம் தேதி வரை பெறப்பட்டது. இதில், மொத்தம் 6 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. பின்னர், மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த 30-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடந்தது.
இந்த கலந்தாய்வின் மூலம் பி.காம் 57 இடங்கள், கணினி அறிவியல் 40 இடங்கள், கணிதம் 18 இடங்கள், ஆங்கிலம் 19 இடங்கள், தமிழ் 16 இடங்கள் என மொத்தம் 150 இடங்கள் நிரம்பியது. இதையடுத்து, மீதமுள்ள காலியிடங்களை நிரப்ப வரும் 28ம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான வகுப்புகள் ஜூலை 3-ம் தேதி துவங்குகிறது.