வேலாயுதம்பாளையம்,மார்ச்21: கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் செல்வம்( 55) . இவர் அந்த பகுதியில் கூரை வேய்ந்த தகர கொட்டகையில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சுமார் 9 மணிக்கு மேல் வீட்டின் மேற்கூரையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த செல்வம் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை .இதுகுறித்து செல்வம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கூரை வீட்டில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அணைத்து தீயை கட்டுப்படுத்தி தீ அருகாமையில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர். இருப்பினும் ரூ 2 லட்சத்துக்கு மேற்பட்ட வீட்டில் இருந்த கட்டில், மெத்தை, பீரோ, டிவி மற்றும் உணவு பொருட்கள், பாத்திரங்கள், துணிமணிகள், ஆவணங்கள் என அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின. இது குறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்