கந்தர்வகோட்டை, ஏப்.3: புனல்குளம் ஊராட்சியில் எள் பிரித்தெடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் புனல்குளம் ஊராட்சியில் விவசாயிகள் பயிர் செய்திருந்த எள் தற்சமயம் அறுவடை செய்து காய வைத்து எள் பிரித்து எடுக்கும் பணி செய்து வருகிறனர். கிராமப்புறங்களில் வழுந்தவன் வாழை பயிர்செய் பொருளாதரத்தில் குறைந்தவர் எள் சாகுபடி செய் என்ற சொல் வழக்கத்தில் உள்ளது. எள் குறைந்த செலவில் நிறைந்த லாபம் தரும்பயிர் ஆகும். இதற்கு தண்ணீர் செலவு குறைந்த அளவில் இருந்தால் போதும் என்று கூறுகிறார்கள். எள்ளிலிருந்து பிரிந்து எடுக்கும் எண்ணைக்கு பெயரே நல்லெண்ணெயாகும் இந்த எண்ணையை தினசரி உணவு சேர்த்துக் கொண்டால் மூட்டுக்கள் நன்கு இயங்கி உடல் வலி இல்லாமல் விவசாய வேலை செய்ய இயலும் எனவும், இப் பகுதி விவசாயிகள் தினசரி நல்லெண்ணையை கை, கால்களில் தேய்த்து வருகிறார்கள் வாரம் தோறும் நல்லெண்ணெய் குளியல் செய்தால் கண் எரிச்சல், தலை முடி உதிர்வது குறையும், உடல் குளிர்ச்சிபெறும் என்று கூறுகிறார்கள். மேலும் விவசாயிகளிடமிருந்து அரசு எள் கொள்முதல் செய்து எண்ணையாக பிழிந்து அரசு நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறார்கள்.