சென்னை: புத்தாண்டை கொண்ட குடும்பத்துடன் வந்தபோது, பக்கிங்காம் கால்வாயில் குளித்த பொறியியல் மாணவர் மாயமான நிலையில் இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது. புதுச்சேரி மாநிலம், சாரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் என்பவரின் மகன் திவாகர் (22). இவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பொறியியல் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது பெற்றோருடன் புத்தாண்டை கொண்டாடுவதற்காக செய்யூர் அடுத்த கடப்பாக்கம் பகுதியில் உள்ள ஆலம்பரைகோட்டைக்கு வந்துள்ளனர். கோட்டை சுற்றி பார்த்துவிட்டு அருகே உள்ள பக்கிங்காம் கால்வாயிலில் குளித்துக் கொண்டிருந்தார். ஆழமான பகுதிக்கு சென்றபோது நீச்சல் தெரியாததால் திவாகர் நீரில் மூழ்கி மாயமானார். உடனடியாக அவரது குடும்பத்தினர் சூனாம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க அங்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாயமானவரை தீவிரமாக தேடினர். நீண்ட நேரம் போராடி தேடியும் திவாகர் உடல் கிடைக்கவில்லை.இந்நிலையில், கடப்பாக்கம் அடுத்த கோட்டைக்காடு பக்கிங்காம் கால்வாய்யோரம் நேற்று காலை திவாகரின் உடல் கரை ஒதுங்கிய. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற சூனாம்பேடு போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….